Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

கடந்த பிப்வரியில் நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு புகார் - பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் செமஸ்டர் தேர்வு : தேர்வானவர்களும் எழுதலாம் என தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

பொறியியல் மாணவர்களுக்கு கடந்த நவம்பர், டிசம்பர் செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் இணையவழியில் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்றுஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் உயர்கல்வி்துறை முதன்மைச்செயலர் அபூர்வா, அண்ணா பல்கலை. பதிவாளர் (பொறுப்பு) ராணிமரிய லியோனி வேதமுத்து, தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பின்னர், அமைச்சர் பொன்முடிசெய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘ஆன்லைன் தேர்வு, அரியர் தேர்வுதொடர்பாக மாணவர்கள் முன்வைத்துள்ள புகார்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுஎடுக்கப்படும்” என்றார்.

பின்னர், முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி, ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்துஉயர்கல்வித் துறை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேர்வு கட்டணம் கிடையாது

அண்ணா பல்கலைக்கழகம், 2020நவம்பர், டிசம்பர் செமஸ்டர் தேர்வுகளை கடந்த பிப்ரவரியில் இணையவழியில் நடத்தியது. அத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகவும், அதனால் சிரமங்கள் ஏற்பட்டதாகவும் முதல்வ்ர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். மாணவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை கருத்தில்கொண்டும் அவர்களின் எதிர்காலம் கருதியும், முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர், துறையின்முதன்மைச் செயலர், அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மாணவர்களின் நலன் கருதி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் நடந்த பொறியியல் செமஸ்டர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதை கருத்தில்கொண்டு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும். அந்த மாணவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பிப்ரவரி தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள், விரும்பினால் அவர்களும் இத்தேர்வை எழுதலாம்.

தேர்வு இணையவழியில் 3 மணிநேரம் நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகம், கரோனாவுக்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாள் முறையே பின்பற்றப்படும். ஏப்ரல், மே செமஸ்டர் தேர்வுகளும் மேற்கண்ட முறையிலேயே நடத்தப்படும்.

மே 25 முதல் தேர்வுகள்

முழு ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் மே 25 முதல் நடத்தப்படும். அதற்கானஅறிவிப்புகளை அந்தந்த பல்கலைக்கழகங்களே வெளியிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x