Published : 11 May 2021 03:12 AM
Last Updated : 11 May 2021 03:12 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை, ஊரடங்கு நடைமுறை குறித்து சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினருடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று உதவி ஆட்சியர் சீ.பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில், காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், வட்டாட்சியர்கள் பட்டுக்கோட்டை தரணிகா, பேராவூரணி ஜெயலட்சுமி, துணை வட்டாட்சியர்கள், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதில், உதவி ஆட்சியர் சீ.பாலச்சந்தர் பேசும்போது, “வீட்டில் தனிமைப் படுத்தப்பட போதிய இடம் இல்லாதவர்களை மட்டும் கரோனா தனிமைப் படுத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். ஊரடங்கு விதிமீறி செயல்படும் கடைகளை சீல் வைக்க வேண்டும். மொய் விருந்து விழாக்களை கண்டிப்பாக நடத்த அனுமதிக்கக் கூடாது. கரோனா தொற்று அதிகம் பரவாமல் இருக்க அலுவலர்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார்.
பின்னர், பட்டுக்கோட்டை நகரப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட உதவி ஆட்சியர் பகல் 12 மணிக்கு மேல் திறந்து இருந்த கடைகளை மூட உத்தரவிட்டார். தொடர்ந்து பேராவூரணி கடைவீதியிலும் உதவி ஆட்சியர், பட்டுக்கோட்டை டிஎஸ்பி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT