Last Updated : 08 May, 2021 03:15 AM

 

Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

4-வது முறையாக அரியணை ஏறி வரலாற்றுச் சாதனை - எளிய அணுகுமுறையால் மக்களைக் கவர்ந்த ரங்கசாமி :

ரங்கசாமி புதுச்சேரி மக்களிடையே அதிகம் பரிச்சயமான அரசியல் தலைவர்களில் ஒருவர். புதுச்சேரி மாநிலத்தில் 4-வது முறையாக முதல்வராகி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய கட்சியான பாஜக, மாநில கட்சியான என்.ஆர் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆர்வம்காட்டியது ரங்கசாமி என்ற தனி நபரின் ஆளுமைக்காகதான். எளிமை கலந்த ஆளுமை 4-வது முறையாக தற்போதும் அவரை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள திலாசுப்பேட்டையில் கடந்த 1950, ஆகஸ்ட்4-ம் தேதி ரங்கசாமி பிறந்தவர்.வணிகவியல் மற்றும் சட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர். காமராஜரை பின்பற்றுபவர். இளம் வயதில் காமராஜருக்கு மன்றமும் நிறுவியவர். நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர்.

தொடக்கத்தில், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாளுக்கு உதவியாளராக தனதுஅரசியல் பயணத்தை தொடர்ந்தவர். ஒரு கட்டத்தில் அவரையே எதிர்த்து நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். 1990 தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 982 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி.

அதற்கடுத்து நடைபெற்ற 1991, 1996, 2001, 2006 தேர்தல்வரை தட்டாஞ்சாவடி தொகுதியின் நிரந்தர எம்எல்ஏவாக ரங்கசாமி வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில் 1991-ல் அமைச்சராகவும், 2001 மற்றும் 2006 தேர்தல் வரை ஆட்சி அமைத்த போது முதல்வராகவும் பதவி வகித்தார்.

பின்னர் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் 2008-ல் பதவி விலகினார். அதன்பிறகு, தன்னிச்சையாக புதிய கட்சியான என். ஆர் காங்கிரஸ் கட்சியை நிறுவி, 2011 தேர்தலை எதிர்கொண்டு 48 நாட்களுக்குள் தேர்தலை சந்தித்து, ஆட்சியையும் பிடித்தார். மூன்றாவது முறையாக முதல்வராகவும் பொறுப்பேற்றார்.

2011 மற்றும் 2016 தேர்தலில் இந்திரா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2011தேர்தலில் கதிர்காமம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் அதை ராஜினாமா செய்தார். 2011 முதல்2016 வரை புதுச்சேரி முதல்வராக இருந்தார். 2016 - 2021 காலகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

எளிய நிர்வாகத்துடன் கூடியஅவரது ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு காலை நேரத்தில் ரொட்டி பால் வழங்கும் திட்டம்,மூத்த குடிமக்களுக்கு உதவித்தொகை உயர்வு, புதுச்சேரியின் முக்கிய ஆலைகளை இயக்கியது, விவசாயிகளுக்காக திட்டங்களை அமல்படுத்தியது, பேரிடர் கால நிவாரணங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. எப்போதும், மக்கள் யாரும் எளிய முறையில் அணுகும் விதத்தில் இருப்பவர்.

தற்போது நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக பெரும்பான்மை பெற்ற நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராக ரங்கசாமி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இதன் மூலம்புதுச்சேரி மாநிலத்தில் 4-வது முறையாக முதல்வராகி ரங்கசாமி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

புதுச்சேரியில் 1936 முதல் தற்போது வரை 20 பேர் முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளனர். இதில்அதிகபட்சமாக ரங்கசாமி மட்டுமே 4 முறை முதல்வர் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுவரை எம்.ஓ.எச்.பரூக் 3 முறையும், வெங்கடசுப்பா ரெட்டியார், சுப்பிரமணியன், எம்.டி.ஆர்.ராமச்சந்திரன், சண்முகம், வைத்திலிங்கம் ஆகியோர் தலா 2 முறையும், எட்வர்ட் குபேர், ஜானகிராமன், நாராயணசாமி ஆகியோர் ஒருமுறை முதல்வராக பதவிவகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x