Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM

ஆசிரியை கொலையில் சிலருக்கு தொடர்பு? : மொபைல்போன் விவரங்கள் சேகரிப்பு :

மதுரை: மதுரை திருமங்கலம் கற்பக நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் (46). மனைவியை பிரிந்து வசித்தார். இவரது 11 வயது மகளுக்கு யோகா கற்றுத் தந்தவர் சித்ராதேவி.

கடந்த ஏப்.1-ம் தேதி முதல் சித்ராதேவி மாயமானார். திருமங் கலம் நகர் போலீஸார் விசா ரித்தனர். இதனிடையே மே 4-ல் ஹரிகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தன்னை திருமணம் செய்ய மறுத்த சித்ராதேவியை கொன்று வீட்டின் குளியலறையில் புதைத்துள்ள தாகக் குறிப்பிட்டிருந்தார்.

சித்ராதேவியின் உடலை நேற்று முன்தினம் போலீஸார் மீட்டனர். இந்நிலையில், இக்கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சித்ராதேவி குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சித்ரா தேவியின் சகோதரர் கார்த்திக் கூறுகையில், எனது அக்கா மாயமானது குறித்து போலீஸார் முறையாக விசாரிக்காமல் அலட்சியப்படுத்தினர். சித்ராதேவிக்கும், அவரது கணவருக்கும் இடையே சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. இதை பயன்படுத்திக் கொண்ட ஹரிகிருஷ்ணன், சித்ராதேவியை அவரது கணவரிடமிருந்து நிரந்தரமாகப் பிரிந்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு சித்ரா தேவி சம்மதிக்காததால் கொலை செய்துள்ளார். ஹரிகிருஷ்ணன் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதம் மூலம் காவல் துறையின் கவனத்தை திசை திருப்பியுள்ளார். இந்தக் கொலையில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கிறது. இது தொடர்பாக ஹரிகிருஷ்ணனின் குழந்தையிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

போலீஸார் கூறுகையில், சித்ராதேவி கொலையில் ஹரிகிருஷ்ணன் தவிர, மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கிறோம். ஹரிகிருஷ்ணன் யாரிடமெல்லாம் மொபைல்போனில் பேசினார் என்ற விவரங்களை சேகரித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x