Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM

ஒட்டன்சத்திரத்தில் வெற்றி பெற்றவருக்கு முதன் முறையாக அமைச்சர் பதவி :

அர.சக்கரபாணி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவர்களுக்கு எந்த ஆட்சியிலும் அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையில், இந்த முறை அங்கு வெற்றி பெற்ற அர.சக்கரபாணிக்கு முதன் முறையாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் 1952 முதல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.க்களாக இருந்துள்ளனர். வாரியத் தலைவர்களாகப்பதவி வகித்துள்ளனர். ஆனால் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இதுவரை அமைச்சராக நியமிக்கப்பட்டதில்லை.

இத்தொகுதியில் அர.சக்கர பாணி கடந்த 1996, 2001, 2006, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு 2006 முதல் 2011 வரை நடந்த திமுக ஆட்சியில் அரசு கொறடா பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக இவருக்கு உணவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு முதன் முறையாக அமைச்சர் அந்தஸ்தும் கிடைத்துள்ளது. திமுக ஆட்சியில் இரண்டு முறை அமைச்சர் பதவி வகித்த ஐ.பெரியசாமிக்கு இந்த முறை கூட்டுறவுத் துறை வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு முதன் முறையாக இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x