Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

4 அரசு மருத்துவமனைகளில் - கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை அமைக்க நடவடிக்கை : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஓமலூர், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், 38 தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அறிகுறியற்ற கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதனிடையே, தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அபாய கட்டத்தை எட்டும்போது, அவர்கள் சுவாசிக்க ஆக்சிஜன் வழங்கும் வசதியுடன் கூடிய படுக்கை வசதி அவசியமாகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், சேலம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகள் ஆபத்தான நிலையை எட்டும்போது, அங்கு ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

சேலம் அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கை நிரம்பி இருப்பதால், இங்கு சிகிச்சைக்காக வருபவர்கள் ஆக்சிஜன் படுக்கை வசதிக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் ராமனிடம் கேட்டபோது, “சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பிரிவில் ஆக்சிஜன் படுக்கைகள் தற்போது 650 உள்ளன. இவை அனைத்திலும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வேறு நோயாளிக்கு ஆக்சிஜன் படுக்கை தேவைப்படும்போது, சிகிச்சையில் ஓரளவு குணமடைந்தவர்களை இடம் மாற்றி, புதிய நோயாளி களுக்கு ஆக்சிஜன் படுக்கை வழங்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளை ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பக்கூடாது. உரிய சிகிச்சையை தொடர்ந்து வழங்க வேண்டும். அதனை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும்.

மாவட்டத்தில் மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் போதுமான அளவு வழங்கப்பட்டு வருகிறது. மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், பெத்தநாயக்கன் பாளையம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், சேலம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 250 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இவை தயாராகிவிடும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x