Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

கரோனா தடுப்பூசி குறித்த அச்சத்தைப் போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கரோனா தடுப்பூசி குறித்த அச்சத்தைப் போக்கி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் ஆட்சியர்  வெங்கடபிரியா அறிவுறுத்தினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர்  வெங்கட பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஆட்சியர் பேசியது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்த வேண்டும். மேலும், தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது குறித்து பொதுமக்களிடையே உள்ள அனைத்து அச்ச உணர்வுகளையும் போக்கி, எவ்வித தயக்கமுமின்றி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஊக்குவிக்க வேண்டும்.

தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இயக்குவோர் மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசம், கையுறைகள், கிருமிநாசினிகள் ஆகியவற்றை தவறாமல் வழங்க வேண்டும்.

மேலும், வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்பட்டு, அவரவர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றுக்கு எதிரான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இருக்கும் நபர்களுக்கு அபராதம் விதித்து வசூல் செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x