Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

சமூக வலைதளத்தில் மாணவியின் புகைப்படத்தை பதிவேற்றிய - இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை :

பள்ளி மாணவியை புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை காந்திநகரைச் சேர்ந்தவர் முகமது சபீர் (21). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலரின் புகைப்படங்களை எடுத்து, அதனை தாங்கள் ஒன்றாக இருப்பதுபோல மாற்றி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள் ளார்.

இதையடுத்து, 13 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர், சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் வெளியிட்டது குறித்து முகமது சபீரிடம் கேட்டுள்ளனர். அப்போது, அவர்களை தகாத வார்த்தையால் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கடந்த 2019 ஜூன் மாதம் முகமது சபீர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்பு (போக்ஸோ) சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, ஆனைமலை போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு மாற்றப் பட்டது.

கோவையில் உள்ள போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிவடைந்து நீதிபதி ஜெ.ராதிகா நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட முகமது சபீருக்கு ஒருபிரிவில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், மற்றொரு பிரிவில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x