Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
ஈரோடு: பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு ரம்ஜான் போனஸ் வழங்குவதில், ஏஐடியுசி மற்றும் பீடி நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பீடி தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பீடி சுற்றும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்களுக்கு ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு போனஸ் வழங்கப்படுவது வழக்கமாகும். அதனடிப்படையில், இந்த ஆண்டுக்கான (2020-2021) போனஸ் மற்றும் இதர கோரிக்கைகளை ஏஐடியுசி - கொங்கு மண்டல ஐக்கிய பீடித் தொழிலாளர் சங்கம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பீடிக் கம்பெனிகளுக்கு அனுப்பி இருந்தது.
இதையடுத்து பீடி கம்பெனி நிர்வாகங்களுக்கும், ஏஐடியுசி சங்கத்திற்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் நிறைவாக சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, ஈரோடு, விபிஆர் காலேஜ் பீடி தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு அவர்கள் சுற்றிய 1000 பீடிகளுக்கு ரூ.26 வீதம் கணக்கிட்டு போனஸாக வழங்கப்பட உள்ளது.
இதேபோல், ஈஏ பீரான் பீடி கம்பெனியில் 1000 பீடிகளுக்கு ரூ.25 வீதம் கணக்கிட்டு போனஸ் வழங்கப்படும். இந்த ஒப்பந்தங்கள் மூலம் இரண்டாயிரம் தொழிலாளர்கள் பயனடைவார்கள், என கொங்கு மண்டல ஐக்கிய பீடித் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.சின்னசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT