Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

காரைக்காலில் வருவாய்த் துறை சான்று கேட்டு விவசாயிகள் அலைக்கழிப்பு : துணைநிலை ஆளுநர் தீர்வுகாண கோரிக்கை

காரைக்கால் மாவட்டத்தில் நெல் அறுவடைக்குப் பிறகு தரிசு நிலத்தில் எள் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் வேளாண் துறையினர் வருவாய்த் துறையின் சான்றிதழ் கேட்டு அலைக்கழிக்கப்படும் பிரச்சினைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தீர்வுகாண வேண்டும் என ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் டாக்டர் எஸ்.ஆனந்தகுமார், புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு நேற்று அனுப்பியுள்ள மனு விவரம்:

நெல் அறுவடைக்குப் பிறகு, அந்த தரிசு நிலத்தில் காய்கறி, எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, புதுச்சேரி வேளாண் துறை மானியம் வழங்குகிறது. இதில், எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் மட்டும் கிராம நிர்வாக அலுவலரின் சான்று கேட்டு கட்டாயப்படுத்தப்படுகிறது.

ஆனால், காய்கறி பயிர் செய்துள்ள விவசாயிகளிடம் சான்று கேட்கப்படவில்லை. கரோனா பரவல் தடுப்பு பணிகளில் வருவாய்த் துறையினரும் ஈடுபட்டு வருவதால், விவசாயிகள் எளிதாக சான்றிதழ் பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

மானியம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தில் நில ஆவணச் சான்று அல்லது வருவாய்த் துறையின் சாகுபடி சான்று அல்லது அடங்கல் ஆகியவற்றின் சுய சான்றொப்பமிட்ட நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்துத் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, வருவாய்த் துறையின் சாகுபடி சான்றை மட்டும் கட்டாயப்படுத்துவது தவறான உள்நோக்கத்தையே காட்டுகிறது.

எனவே, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இவ்விஷயத்தில் தலையிட்டு, பிரச்சினையின் உண்மை நிலையை கண்டறிந்து, விவசாயிகள் அலைக்கழிக்கப்படாமல் இருக்கும் வகையில் உரிய தீர்வுகாண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x