Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க - மேஜைக்கு ஒரு நுண்பார்வையாளர் : சிவகங்கை ஆட்சியர் தகவல்

‘‘வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க மேஜைக்கு ஒரு நுண்பார்வையாளர் இருப்பார்,’’ என சிவகங்கை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

காரைக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தோ்தல் பார்வையாளா்கள் (பொது) சோனாவனே (காரைக்குடி), அனில்குமார் (திருப்பத்தூர்), முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணன் (சிவகங்கை), அனில் எ.பாட்டில் (மானாமதுரை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதேபோல், தபால் வாக்குகளை எண்ண காரைக்குடிக்கு 3 மேஜைகள், மற்ற தொகுதிகளுக்கு தலா 4 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் வட்டாட்சியா் நிலையிலான அலுவலா் தலைமையில் 5 போ் இருப்பர். அதேபோல் வாக்கு எண்ணுகையை கண்காணிக்க ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண்பார்வையாளா் நியமிக்கப்பட்டுள்ளனர். நுண்பார்வையாளர் பணி நுட்பமானது.

அவர்கள் வாக்கு எண்ணிக்கையைக் கண்காணித்து அவ்வப்போது பார்வையாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, ஒவ்வொரு சுற்று முடியும் போதும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து பார்வையாளரிடம் வழங்க வேண்டும். அனைத்து சுற்றுகள் முடியும் வரை முழுமையாக வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x