Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு - இன்று 30 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை : கோணம் மையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

குமரியில் இன்று பலத்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கோணம் வாக்கு எண்ணும்மையத்தில் கரோனா தடுப்புநடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்றுகாலை 8 மணிக்கு கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிகபட்சமாக 2,20,717 வாக்குகள் பதிவாகியுள்ளன. இவை 30 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் 28 சுற்றுகளாகவும், குளச்சல் தொகுதி வாக்குகள் 27 சுற்றுகளாகவும், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதி வாக்குகள் தலா 26 சுற்றுகளாகவும், பத்மநாபபுரம் சட்டப்பேரவை தொகுதி வாக்குகள் 25 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன.

முதல் சுற்று வாக்குப்பதிவு முடிவு காலை 9.30 மணியளவில்வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவு வரை ஆகலாம் எனத் தெரிகிறது.

இன்று முழு ஊரடங்கு அமலில்இருப்பதால் கரோனா பரிசோதனை செய்து கொண்ட, அனுமதி பெற்ற முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மட்டும் வாக்கு எண்ணும்மையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கோணம் அரசு பொறியியல் கல்லூரி நுழைவு வாயிலில் இருந்து அனைத்து அறைகள், வளாகப் பகுதிகளில் நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் முன்னிலையில் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அங்கு குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் நேற்றே போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x