Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

தடுப்பூசி விலையை தனியார் நிர்ணயிக்க கூடாது : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரோனா தடுப்பூசி விலையை தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்யக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வர ராவ், ரவீந்திர பட் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

கரோனா 2-வது அலை குறித்து அனைத்து மாநில அரசுகளையும் கடந்த டிசம்பர் 4-ம் தேதியே எச்சரித்தோம். சீரம் நிறுவனம் மாதத்துக்கு 5 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறது. அதை 6 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாரத் பயோ டெக் நிறுவனம் மாதத்துக்கு ஒரு கோடி கோவேக்சின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறது. வரும் ஜூலையில் உற்பத்தி திறனை 5 கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசி மாதத்துக்கு 1.2 கோடி தயாரிக்கப்படும்.

இவ்வாறு பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: மத்திய அரசு 50 சதவீதமும் மாநில அரசுகள் 50 சதவீதமும் கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தவிர்த்து மத்திய அரசே 100 சதவீத கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு சரிசமமாக விநியோகம் செய்யலாமே? மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.300 விலையில் தடுப்பூசியை விற்பனை செய்வோம் என்று மருந்து உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது. மற்றொரு மருந்து உற்பத்தி நிறுவனம் மாநில அரசுகளுக்கு ரூ.400 விலையில் தடுப்பூசியை விற்போம் என்று அறிவித்திருக்கிறது.

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி ரூ.185 விலையில் விற்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இதைவிட குறைவான விலையில் தடுப்பூசி விற்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும்கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏன்?

கரோனா தடுப்பூசி விலையை மருந்து உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்யக் கூடாது. மாநிலங்களுக்கு எவ்வளவு கரோனா தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்பதையும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் முடிவு செய்ய கூடாது. இந்த விவகாரங்களில் மத்திய அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். சமூக வலைதளங்களில் உதவி கேட்கும் கரோனா நோயாளிகள் மீது போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்க கூடாது. இந்த விவகாரத்தில் தவறிழைக்கும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவர்கள், செவிலி யர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட் டிருப்பதாக செய்திகள் வருகின்றன. நாடு முழுவதும் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 25,000 மருத்துவர்கள், 2 லட்சம் செவிலியர்கள் பணிக்கு வர உள்ளனர். அவர்களை கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தலாமே?

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான துஷார் மேத்தா கூறும்போது, "என்னால் உடனடியாக பதில் அளிக்க முடியாது. கால அவகாசம் தேவை" என்று வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x