Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

தனியார் மருத்துவமனையில் - மருத்துவரின் 3 பவுன் வளையல்கள் திருட்டு :

புதுச்சேரி

புதுச்சேரி மோந்தோர்சியே வீதியைச் சேர்ந்தவர் டாக்டர் ஸ்வரம்யா (33). இவர் காந்தி வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் மருத்துவமனையில் பணியில் இருந்தபோது ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதற்காக தனது கையில் அணிந்திருந்த மூன்றரை பவுன் வளையல்களை தனது டாக்டர் கோட்டின் பாக்கெட்டில் வைத்துவிட்டு ஆபரேஷன் செய்தார். பிறகு கோட்டை அங்கேயே போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

வீட்டுக்கு சென்ற பின்னர் தான் வளையல்களை தனது கோட் பாக்கெட்டில் போட்டது நினைவுக்கு வந்தது. உடனே மருத்துவமனைக்கு சென்று வளையல்களை தேடியபோது காணவில்லை. ஆபரேஷன்போது ரத்தக்கறை படிந்திருந்ததால் சலவைக்கு போட்டுவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

சலவை கடைக்கு சென்று பார்த்தபோதும் வளையல்களை காணவில்லை. மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மருத்துவர் ஸ்வரம்யா ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x