Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரம் அடைந்து வருவதால், தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், தேவைக்கு தடுப்பூசிகிடைக்காமல் இரு வாரங்களாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் இதுவரை 87,011 பேர் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். இரண்டாம் கட்டமாக 26,541 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 28-ம் தேதி முதல் நேற்று வரை 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் மக்கள் தடுப்பூசி இன்றி பெரும்பாலும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 2-ம் கட்டத்துக்கான தவணை தேதி முடிந்த பின்னரும், தட்டுப்பாட்டால் தடுப்பூசி போட முடியாமல் உள்ளனர். குருந்தன்கோடு, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையங்களில் தொடர்ச்சியாக கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினசரி 3 ஆயிரம் பேர்
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணலீலா கூறும்போது, “கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மத்தியில், அவைவருவதை பொறுத்து அனைத்துஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் பிரித்து அனுப்பி செலுத்தப்பட்டு வருகிறது.இதில் கடந்த இரு நாட்களாக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் வரவில்லை. தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சரிசெய்யும் வகையில் சுகாதார தலைமை அலுவலகத்தில் வலியுறுத்தியிருந்தோம். அதைத்தொடர்ந்து தடுப்பூசி வந்துள்ளது.
நாளை (இன்று) முதல் மீண்டும் தினமும் 3 ஆயிரம் பேருக்கு குறையாமல் கோவிட் தடுப்பூசி கன்னியாகுமரி மாவட்டத்தில் போடப்படும். அதேநேரம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் எப்போதும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT