Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

‘வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டது உடுமலையைச் சேர்ந்த பெண்கள்’ :

திருப்பூர்: உடுமலை அருகே கணியூர் அமராவதி வாய்க்காலில் சடலங்களாக மீட்கப்பட்ட இரண்டு பெண் சடலங்களின் அடையாளம் தெரிந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, "திருப்பூர் மாவட்டம் அமராவதி பிரதான வாய்க்கால் காரத்தொழுவு, நாட்டுக்கல்பாளையம் அருகே காயத்துடன் பெண் சடலம் கிடப்பதாக, அப்பகுதியில் கால்நடை மேய்க்க சென்றவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதே பகுதியில் ஒரு கி.மீ தொலைவில் மற்றொரு பெண் சடலமும் கிடந்துள்ளது. இரண்டு சடலங்களையும் மீட்டு போலீஸார் விசாரித்து வந்தனர்.

இதில் உடுமலைப்பேட்டை இந்திரா நகரை சேர்ந்த நாகராஜன் மனைவி கோகிலாமணி (40), மற்றொருவர் உடுமலைப்பேட்டை எஸ்.வி.புரம் முத்தையா மனைவி கீர்த்தனா (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. ஒருவர் குடும்பத் தலைவியாகவும், மற்றொருவர் பியூட்டி பார்லர் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 27-ம் தேதி இரவு, இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கணியூர் போலீஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து இருவரது சடலங்களும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அமராவதி வாய்க்காலில் தவறி விழுந்தார்களா அல்லது கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்டார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x