Published : 29 Apr 2021 03:14 AM
Last Updated : 29 Apr 2021 03:14 AM

ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே அனுமதி - ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழ்நிலையிலும் திறக்கப்படாது : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விளக்கம்

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழ்நிலையிலும் திறக்கப்படாது. ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க மட்டுமே அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் திறக்கதமிழக அரசும் ஒத்துக் கொண்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை 2018-ம் ஆண்டில் மூடியதே தமிழக அரசு தான். அதுமட்டுமல்லாமல் இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது தமிழக அரசு தொடர்ந்து வாதங்களை முன்வைத்ததால், ஆலையை தமிழக அரசு மூடியது சரிதான் என உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்குநடைபெற்று வருகிறது. இந்த வழக்கிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு தொடர்ந்து வாதங்களை முன்வைத்து வருகிறது. ஆலையை ஏன் மூடினோம் என்பதற்கான சான்றுகளையும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காக தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குநடந்து வருகிறது. அந்த பிரதானவழக்குக்கும், தற்போது ஆக்சிஜன்உற்பத்திக்கு அனுமதி அளித்திருப்பதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.

தற்போது நாட்டில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகபரவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், தேசிய அவசர நிலையை கருத்தில்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த ஆக்சிஜன் உற்பத்திக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமே மின்சாரம் வழங்கப்படும். ஆலை வளாகத்தில் உள்ள அனல்மின் நிலையம் இயக்கப்படாது என்பதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது.

அதுவும் நான்கு மாதங்களுக்கு மட்டும் தான். நான்கு மாதங்களுக்கு பிறகு கரோனா இல்லாத நிலை ஏற்பட்டால் ஆக்சிஜன் உற்பத்தி நிலையமும் மூடப்படும். எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. இது தான் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு நகல் கிடைத்ததும், அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x