Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM
எட்டயபுரம் அருகே குமரிகுளம் கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் முறையாக பணி வழங்கக்கோரி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
எட்டயபுரம் அருகே டி.சண்முகபுரம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பா.தேவி தலைமையில், குமரிகுளம் கிராமத்தை சேர்ந்த பெண்கள், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். பின்னர், அதிகாரிகளிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
டி.சண்முகபுரம் ஊராட்சி தலைவர், `ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு பெற்றால்தான், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்ய முடியும். இல்லையென்றால் வேலை செய்ய முடியாது’ என்று கூறினார். தற்போது, `குடிநீர் இணைப்பு பெற்ற அனைவரும் ரூ.1,300 வழங்கினால் தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்ய முடியும்’ என்று கூறுகிறார்.
ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை இல்லையென்றால் வருவாய் இல்லாமல் சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT