Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து - ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் வலியுறுத்தல்

மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதைக் கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு விளைவித்த, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் எழுச்சி மிகுந்த போராட்டங்களை நடத்தினர். காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது.

இச்சூழலில், நாட்டில் தற்போதுநிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து, அரசுக்கு இலவசமாக வழங்க அனுமதிகோரி, வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுதாக்கல் செய்துள்ளது. ஆலைக்கு அனுமதி வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு ஆலை மீது நம்பிக்கை இல்லை என்பதையும், மக்களிடம் அச்சமும் பதற்றமும் நிலவுவதையும் நிறுவனமும், மத்திய அரசும் உணர்ந்ததாக தெரியவில்லை. மத்திய, மாநில அரசுகளின் மிகத் தவறான பொருளாதாரக் கொள்கையால் பலஆயிரக்கணக்கான சிறிய, பெரியதொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தைப் பயன்படுத்தி உரியதொழிற்சாலைகளை ஆக்சிஜன் உற்பத்தி செய்யப் பயன்படுத்துவதை விடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கோர முயற்சிப்பது, மக்கள் மீதான அலட்சியம் ஆகும்.

எனவே, ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான முயற்சியைக் கைவிட்டு, மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x