Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

குப்பையில் கிடந்த 11 பவுன் நகையை போலீஸாரிடம் ஒப்படைத்த - தூய்மை பணியாளர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு :

குப்பைத் தொட்டி மற்றும் சாலையில் கிடந்த 11 பவுன் நகைகளை காவல் நிலையத்தில் நேர்மையாக ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள் 2 பேரை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.

ராயபுரம், ஆஞ்சநேயர் நகர், ஆடு தொட்டி 9-வது தெருவைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர் பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 4-ல் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டை, ரங்கராஜபுரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை சேகரித்துக் கொண்டு, கண்ணன் ரோடு – ஏகப்பன் தெரு சந்திப்பில் குப்பைகளை தரம் பிரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பையில் 10 பவுன் நகைகள் இருந்தது தெரியவந்தது. உடனே, மோகனசுந்தரம் அந்த நகைகளை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

சென்னை, கொட்டிவாக்கம், வெங்கடேஸ்வரா நகர் முதல் தெருவில் வசிப்பவர் ராணி. மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பெருங்குடி, ராஜீவ்காந்தி நகர் 4-வது தெருவில் உள்ள பூங்கா அருகே கிடந்த ஒரு பவுன் நகைகளை எடுத்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்த இரு சம்பவங்களிலும் நகைகளை நேர்மையான காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள் மோகனசுந்தரம் மற்றும் ராணி ஆகிய இருவரையும் காவல் ஆணையர் மகேஷ் குமார் நேற்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x