Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM
கரோனா பரவலை கட்டுப்படுத்த வழிபாட்டுத் தலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் வழிபாட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் டிஜிபி ஜே.கே.திரிபாதி, அறநிலையத் துறை செயலர் விக்ரம் கபூர், உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுத் துறை செயலர் பி.செந்தில்குமார், பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகந்நாதன், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் ராமகிருஷ்ணா மிஷன்வித்யாபீத் செயலர் சுகதேவானந்தா, ஆசிரம செயலர் பத்மாஸ்தானந்தா, தருமபுரம் ஆதீன தலைமைகுரு மீனாட்சி சுந்தரம், பிரம்மகுமாரிகள் தலைவர் ஜான்சி, சிஎஸ்ஐ சென்னை திருச்சபை துணைத் தலைவர் பால் வில்லியம்ஸ், மெட்ராஸ் ஆர்ச்பிஷப் ஜார்ஜ் அந்தோணி சாமி, சுன்னத் முஸ்லிம் அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், ஷியா முஸ்லிம் தலைமை காஜி குலாம் முகமது மஹதிகான் உட்பட பல்வேறு அமைப்புகளின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பங்கேற்றனர்.
மதத் தலைவர்களை அதிகாரிகள் தனித்தனியாக சந்தித்தும், கோரிக்கைகளை பெற்றுக் கொண்டனர். அரசின் நடவடிக்கைகளையும் விளக்கினர்.
செய்தியாளர்களிடம் இந்திய ஹஜ் சங்க தலைவர் அபுபக்கர் கூறும்போது, ‘‘ரம்ஜான் மாதத்தின் 27-வது நாள் மே 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. அன்று மட்டும் கட்டுப்பாடுகளை தளர்த்த கேட்டுள்ளோம்’’ என்றார்.
எபிஸ்கோபல் திருச்சபை பேராயர் மேசாக் ராஜா கூறியபோது, ‘‘ஞாயிறு காலை, மாலை வேளைகளில் தலா 1 மணிநேரம் 50 சதவீத உறுப்பினர்களுடன் தேவாலயங்களில் பிரார்த்தனை நடத்த அனுமதிக்க கேட்டுள்ளோம்’’ என்றார். வழிபாட்டு விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT