Published : 20 Apr 2021 03:13 AM
Last Updated : 20 Apr 2021 03:13 AM
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர்தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்தும், இணையத்தை பயன்படுத்தியும் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குசெமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி,மார்ச் மாதங்களில் இணையவழியில்நடத்தப்பட்டன. தேர்வு முடிவுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு, தேர்வு எழுதிய பாடத்துக்கு அருகே தேர்ச்சி அல்லது தோல்வி என்று குறிப்பிடாமல், ‘நிறுத்திவைப்பு’ என்று குறிக்கும் விதமாக WH (Withheld) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
30 ஆயிரம் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், 30 சதவீதமாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில்,இனி நடக்க உள்ள இணையவழி செமஸ்டர் தேர்வில் மாற்றம் கொண்டுவருவது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை செய்து வந்தது.
இந்நிலையில், அதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நடப்பு கல்வி ஆண்டில் ஏப்ரல் - மேமாதத்துக்கான செமஸ்டர் தேர்வுகளை இணையவழியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து விடை எழுதும் வகையிலேயே தேர்வுகள் நடத்தப்படும். இருந்தபோதிலும் கேள்விக்கான விடைகள் நேரடியாக புத்தகத்தில் இருக்காது. விடைகளை பாடத் திட்டத்திலும், இணையதளத்திலும் ஆராய்ந்து எழுதும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.
5 கேள்விகளுக்கு தலா 2 மதிப்பெண்கள், 5 கேள்விகளுக்கு தலா 8 மதிப்பெண்கள் என மொத்தம் 50மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தேர்வின்போது, பிற மாணவர்களிடம் இருந்து கேள்விக்கான விடைகள் பெறப்பட்டிருந்தால், அது முறைகேடாக கருதப்படும். ஒன்றரை மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் 12 பக்கங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு எழுதி முடித்த பிறகு, விடைத்தாளை ஸ்கேன் செய்துஉரிய இ-மெயில் முகவரிக்கு அனுப்பவேண்டும். தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அறிந்துகொள்ள, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT