Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

குடலிறக்க பிரச்சினையால் அவதி - முதல்வர் பழனிசாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை : விரைவில் வீடு திரும்புவார் என தகவல்

குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் பழனிசாமி, சென்னையில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் பழனிசாமி. சில மாதங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார். அப்போது, அவருக்கு குடலிறக்கம் (ஹெர்னியா) பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்ததால், தேர்தலுக்கு பிறகு வந்து சிகிச்சை பெறுவதாக முதல்வர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து தேர்தலில் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் முதல்வர் ஈடுபட்டார். தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டங்களில் முதல்வர் பங்கேற்றார்.

இந்நிலையில், குடலிறக்க பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் முதல்வர் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான பரிசோதனைகளை செய்த பின்னர், அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக, முதல்வருக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என வந்தது குறிப்பிடத்தக்கது.

‘முதல்வர் பழனிசாமி நலமுடன் உள்ளார். 2 அல்லது 3 நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருப்பார். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்புவார்’ என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x