Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

கரோனா தடுப்பூசிகளை நேரடியாக - மாநில அரசுகளே கொள்முதல் செய்ய அனுமதி வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை உடனே வழங்குவதுடன், கரோனா தடுப்பூசி மருந்துகள், மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவல் கடந்த 7 நாட்களில் விரைவாக அதிகரித்து வருவதையும், பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்திருப்பதையும் தாங்கள் அறிந்திருக்கக் கூடும். 2021 ஏப்ரல் 17-ம் தேதி வெளியான அதிகாரபூர்வ தகவலில், ‘தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 61,593ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆகவும் அதிகரித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ள போதிலும், நிலைமை கைமீறிப் போய்விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞரே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு சூழல் உள்ளது.

தடுப்பூசி மட்டுமே கரோனாவில் இருந்து மக்களின் உயிரைகாப்பதற்கு தற்போது கிடைக்கக்கூடிய ஒரே சிறந்த சாதனம். அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவை மத்திய அரசு இன்னும் எடுக்காத நிலையில், முன்னுரிமை தரப்பட்டுள்ள பிரிவினர் மட்டுமே தற்போது தடுப்பூசி பெற முடிகிறது.

தமிழகத்தில் இதுவரை 46 லட்சத்து 70 ஆயிரம் பேருக்குதான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகளை அனுப்புமாறு மாநில அரசு கேட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கரோனாவின் கொடிய விளைவுகளில் இருந்து மனித உயிர்களைக் காக்க அனைவருக்கும் தடுப்பூசி என்பது காலத்தின் தேவையாகிறது. தமிழகம் ஒருபுறம் தடுப்பூசி பற்றாக்குறையால் தவிப்பதுடன், மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தேவைப்படும் நபர்களுக்குக்கூட தடுப்பூசியை செலுத்த முடியாமல் திணறி வருகிறது.

எனவே, தாங்கள் உடனடியாக தலையிட்டு தமிழக அரசால் கேட்கப்பட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக அனுப்புவதுடன், தமிழக மக்கள்தொகைக்கு ஏற்ப, கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை அதிக அளவு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை அறிவுறுத்த வேண்டும்.

மாநில அரசுகளே சுதந்திரமாக மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். நேரடி கொள்முதல் செய்ய மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி, கூட்டாட்சி தத்துவத்தின் உண்மையான உணர்வில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களை வலுப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x