Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

செங்கல் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மாவட்ட நிர்வாகத்துக்கு ஏஐடியுசி வலியுறுத்தல்

செங்கல் விலை உயர்வை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஏஐடியுசி சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கத்தின், மாநில துணைப் பொதுச் செயலாளரும், கோவை மாவட்ட பொதுச் செயலாளருமான என்.செல்வராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘கோவை தடாகத்தில் இயங்கி வரும், சில செங்கல் சூளைகள், சட்ட விதிகளை மீறியதால் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்படுவதற்கு முன்பு 4,500 செங்கற்கள் கொண்ட ஒரு லோடு ரூ.35.000-க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு லோடு செங்கல் ரூ.58,000-க்கு விற்கப்படுகிறது.

தடாகம் பகுதியில் செங்கல் சூளை நடத்த தடை ஏற்பட்டதை பயன்படுத்தி, மேட்டுப்பாளையம் காரமடை மேற்குப் பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் ஒரு லோடு செங்கல் விலையை ரூ.58,000 வரை உயர்த்தி இருப்பது நியாயமற்ற நடவடிக்கையாகும்.

செங்கல் உற்பத்திக்கான செலவுகள் எந்த வகையிலும் கூடாத நிலையில், சில செங்கல் சூளைகள் மீது அரசு நடவடிக்கை எடுத்ததை காரணம் காட்டி உற்பத்தி குறைவு என்பதை மையமாகக் கொண்டு, செங்கல் உற்பத்தியாளர்கள் செங்கல் விலையை உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கல் விலை உயர்வு காரணமாக, பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீடு கட்டும் திட்டம், பசுமை வீடு கட்டும் திட்டம் போன்றவற்றிலும், அரசு உதவி பெற்று வீடுகள் கட்டும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இவ்விவகாரத்தில் தலையிட்டு செங்கல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x