Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM

அவன்தான் மனுஷன்... : குமரிமுத்துவின் உருக்கம்

விவேக் குறித்து மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது:

நான் துணிந்து சொல்வேன். எந்த ஒரு நகைச்சுவை நடிகர் என்மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை. இதை நடிகர் செந்திலிடம்கூட கூறியுள்ளேன். என் கடைசிமகள் திருமணத்துக்கு கையில்பணம் இல்லை. தம்பி விவேக்கிடம் சென்று, ‘‘இலங்கையில் ஒரு நாடகத்துக்கு அழைக்கிறார்கள். நான் போனால், பெண் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரம் கிடைக்கும்’’ என்றேன். ‘‘நான் வந்தால்என்ன கிடைக்கும்?’’ என்றார். ‘‘ரூ.2லட்சம் வாங்கித் தருகிறேன்’’ என்றேன். ‘‘சரி அண்ணா, வருகிறேன்’’ என்றார்.

விமான டிக்கெட், 5 நட்சத்திர ஹோட்டலில் அறை எல்லாம் போட்டேன். நாடகம் முடிந்ததும் எனக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்தார்கள்.

விழாக் குழுவினர், ‘‘விவேக் அறையை காட்டுங்கள்’’ என்றனர். அழைத்துச் சென்றேன். என் வாழ்க்கையில் சந்தோஷத்தில் அழுதது அன்றுதான்.

விவேக் சம்பளமான ரூ.2 லட்சத்தை அவரிடம் கொடுக்கிறார்கள். அதை அப்படியே வாங்கி, ‘‘அண்ணே, உங்களுக்கு50 ஆயிரம் கொடுத்துவிட்டார்களா? உங்க பொண்ணு கல்யாணத்துக்கு கஷ்டப்படுறேன் என்றீர்களே. இந்தாங்க அண்ணே. ரூ.2 லட்சத்தையும் வைத்துக் கொள்ளுங்க. பொண்ணு கல்யாணத்தை நல்லபடியாக நடத்துங்க அண்ணே’’ என்றார்.

(அழுதுகொண்டே) என் வாழ்க்கையிலேயே கலைவாணருக்குப் பிறகு விவேக்.. அவன் ஒருவன்தான் நடிகன். அவன்தான் மனுஷன்.

இவ்வாறு அந்த பேட்டியில் குமரிமுத்து கண்ணீர் மல்க கூறியிருந்தார். இந்த பேட்டி, தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x