Published : 18 Apr 2021 03:20 AM
Last Updated : 18 Apr 2021 03:20 AM

தினசரி பரிசோதனை எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது - தமிழகத்தில் புதிதாக 9,344 பேருக்கு தொற்று : சென்னையில் 22 பேர் உட்பட ஒரேநாளில் 39 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிய உச்சமாக 9,344 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ஒரேநாளில் சென்னையில் 22 பேர் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப் படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோயில்களில் திருவிழாக் களுக்கும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும்பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. புதிய கட்டுப்பாடுகளை விதித்த போதி லும் தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, தலைமைச் செயலாளர் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், இரவு நேர ஊரடங்கு, கடைகளின் நேரம் குறைப்பு, அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று புதிதாக 9,344 பேருக்குதொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஆண்கள் 5,679, பெண்கள் 3,665 என மொத்தம் 9,344 பேர் நேற்று கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேற்கு வங்கம், பிஹார், மத்திய பிரதேசம், ஒடிசா, திரிபுரா, உத்தர பிரதேசம், கர்நாடகா, ஜார்க்கண்ட், டெல்லி, ஆந்திராவில் இருந்து வந்த 30 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 2,884, செங்கல்பட்டில் 807, கோவையில் 652 பேருக்கு பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 80,728 ஆக அதிகரித்துள்ளது.

9 லட்சம் பேர் குணமடைந்தனர்

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 52,173 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 2,022 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 1,657 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 5,263 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். சென்னையில் 23,625 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 65,635 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் நேற்று ஒரே நாளில் இளை ஞர்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 22 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,071 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,386 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்ச மாக சென்னையில் 2 லட்சத்து 80,184, கோவையில் 66,645, செங்கல்பட்டில் 65,424, திருவள்ளூரில் 50,512 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

2.10 கோடி பரிசோதனை

தமிழகம் முழுவதும் 263 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 10 லட்சத்து 77,500 பரிசோதனைகள் நடந்துள்ளன. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 1 லட்சத்து 804 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x