Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM

நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் - இடியுடன் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் அறிவிப்பு

நீலகிரி, கோவை, சேலம் ஆகியமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேரளா முதல் வட கர்நாடகத் தின் உட்பகுதி வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 16-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும், நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும்.

17-ம் தேதி தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இதர மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

18, 19-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

15-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 11 செமீ, ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 10 செமீ, பவானி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய இடங்களில் தலா 9 செமீ,திருப்பூர் மாவட்டம் அவிநாசி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய இடங்களில் தலா 8செமீ, தேனி மாவட்டம் போடி நாயக்கனூர், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல், சென்னை வில்லிவாக்கம் ஆகிய இடங் களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு நா.புவியரசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x