Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM

கரோனா தடுப்பு உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு - 3 மாதங்களுக்கான மருந்துகள் கையிருப்பு : சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை

கரோனா தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அடுத்த 3மாதங்களுக்கு தேவையான அளவுக்கு மருந்து கையிருப்பில் இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடிகர் விவேக் மற்றும் அவரது குழுவினர் நேற்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழகசுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர். பின்னர்செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நாடு முழுவதும் கடந்த 14-ம் தேதி மட்டும் 2 லட்சம் பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா எண்ணிக்கையை பார்த்துமக்கள் பதற்றம் அடைய வேண்டாம். தமிழகத்தில் கரோனா இறப்புசதவீதம் குறைவாகவே உள்ளது. தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக, 45 வயதுக்கும் மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த இயற்கைபேரிடரை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அவர் மூலம் 10 பேர் பாதிக்கப்படுவர். பொது இடங்களுக்கு செல்லும்போது, மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் தொற்று சங்கிலியை உடைக்க முடியும். இன்று(நேற்று) சுமார் ஒரு லட்சம் பேர்தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். குறைந்தது தினமும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் கரோனா தடுப்புமருந்துகள் உள்ளிட்ட அனைத்துவித மருந்துகளும் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவுக்கு கையிருப்பு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் விவேக் கூறும்போது, ‘‘வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இந்தியாவில் ஒரு நாளுக்கு 2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. தமிழகத்தில் 7 ஆயிரம் பேருக்குதொற்று ஏற்படுகிறது. முகக்கவசம், கைகளை அடிக்கடி கழுவுதல், தனிமனித இடைவெளி ஆகியவைதான் மக்களுக்கு சமூக பாதுகாப்பு. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கரோனா வராது என்பதல்ல. வந்தாலும் உயிரிழப்பு இருக்காது. அரசு மருத்துவமனைகளில் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர். அவர்களை நம்பி மக்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x