Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM

மது போதையில் முரண்டு பிடித்த இளைஞர் மீது வழக்கு பதிவு : இருசக்கர வாகனமும் பறிமுதல்

மது போதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர், மது அளவை கண்டறியும் கருவியில் ஊத மறுத்து அடம் பிடித்தார். அவர் மீது வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து போலீஸார் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் இரவு நேரங்களில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கவும், வாகன பந்தயங்களை தடுக்கவும் முக்கிய சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து போலீஸார் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவில் எழும்பூரில் இருந்து மெரினா நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை போலீஸார் நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, அவர் மது அருந்தியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மதுவின் அளவை அறியும் (பிரீத் அனலைசர்) கருவியில் ஊத அறிவுத்தினர்.

ஆனால், அந்த இளைஞரோ ‘‘நான் குடித்துள்ளது உண்மை. ஆனால், ஊத மாட்டேன். என்னை மன்னித்து விட்டு விடுங்கள்’’ என கெஞ்சலுடன் கேட்டுக் கொண்டார். அரை மணி நேரத்துக்கும் மேலாக போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து போக்குவரத்து காவலர்கள் காவல் ஆய்வாளரை போனில் சம்பவ இடம் வரவழைத்தனர். நீண்ட நேரத்துக்கு பின்னர் அவர் கருவியில் ஊதினார். அப்போது, அவர் அதிக அளவு மது அருந்தி இருந்தது தெரிந்தது.

இதையடுத்து வழக்கும் பதிவு செய்து இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு அவர்கள் அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்திய பின்னரே வாகனத்தை திரும்ப பெற முடியும் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x