Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் - இளநிலை பட்டப்படிப்பு தொடங்க திட்டம் :

தாம்பரம்

தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இளநிலை படிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தாம்பரம் – சானடோரியத்தில் 2005-ம் ஆண்டு 14.73 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமாக தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தினமும் 200 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, தற்போது தினமும் 2,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆண்டின் 365 நாள்களும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை வெளி நோயாளிகளுக்கும், 24 மணி நேரமும் உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இங்கு முதுநிலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை 3 ஆண்டு பட்ட மேற்படிப்பு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இளநிலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகின்றன. ஏற்கெனவே, எம்.டி., பி.எஸ்.எம்.எஸ். என்ற பட்ட மேற்படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். சித்த மருத்துவம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் நன்மதிப்பை பெற்று வருவதால், சிகிச்சைக்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்களுக்கு சித்த மருத்துவத்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதற்கான மருத்துவர்களின் தேவையும் அதிகரித்துள்ளது.

எனவே, மத்திய அரசு நிறுவனமான இந்த மருத்துவமனையில் இளநிலை பி.எஸ்.எம்.எஸ். படிப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய அரசும் இதற்கு அனுமதி அளித்தது. இதன் அடிப்படையில் நேற்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் நேற்று தேசிய சித்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கெனவே இங்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதேபோல் பேராசிரியர்களும் போதிய அளவு உள்ளனர். அனுமதி கிடைத்தவுடன் இளநிலை பட்டப் படிப்புக்கான வகுப்புகள் தொடங்கும் என்றனர்.

இங்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதேபோல் பேராசிரியர்களும் போதிய அளவு உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x