Published : 12 Apr 2021 03:20 AM
Last Updated : 12 Apr 2021 03:20 AM

பாவூர்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி :

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நெல் அறுவடை முடிந்துள்ள நிலையில் காய்கறி வகை பயிர்கள் சாகுபடி தொடங்கியுள்ளன. ஒரு சில பகுதிகளில் இருந்து மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. பெரும்பாலான காய்கறிகள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. காய்கறிகள் வரத்து குறைவாக இருந்தாலும் விலை உயரவில்லை. அனைத்து காய்கறிகளும் குறைந்த விலையிலேயே விற்பனையாகின்றன.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.35 முதல் 40 வரையும், பெரிய வெங்காயம் 15 முதல் 17 வரையும், உருளைக்கிழங்கு 15 முதல் 20 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

வெள்ளைப்பூண்டு கிலோ ரூ.40 முதல் 80 வரையும், தக்காளி 10, வெண்டைக்காய் 5 முதல் 6 வரையும், பூசணிக்காய் 6, சாம்பார் வெள்ளரி 3 முதல் 4, சேம்பு 10, பால் சேம்பு 10 முதல் 15, மாங்காய் 10 முதல் 20 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. மிளகாய், கத்தரிக்காய் ஆகியவை கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகின்றன. வியாபாரிகள் வருகை குறைவாக உள்ளதால் காய்கறிகள் விலை அதிகரிக்கவில்லை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x