Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் - உயிரிழந்தவர்களின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் : அரசின் நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை

அரக்கோணம் அருகே முன்விரோத தகராறில் கொலையானவர்கள் 2 பேரின் உடல்களை உறவினர்கள் நேற்று மாலை பெற்றுக்கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள கவுதம் நகர்பகுதியில் சோகனூர் மற்றும் பெருமாள்ராஜபேட்டை கிராமங்களைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன், சூர்யா ஆகியோர் கடந்த 7-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர். இந்த மோதலில் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த மதன், வல்லரசு, சவுந்தர்ராஜன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த இரட்டை கொலை சம்பவத்தால் சோகனூர் மற்றும் பெருமாள்ராஜபேட்டை கிராமங்கள் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து. ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் - கொலை, கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பெருமாள்ராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த மதன், அஜித், புலி என்ற சுரேந்திரன், நந்தகுமார், கார்த்திக், சத்யா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், கொலை வழக்கில் தொடர்புடைய 20 பேரை கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அரசின் நிவாரண உதவியாக ரூ.1 கோடி வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குருவராஜபேட்டை-திருத்தணி சாலையில் பந்தல் அமைத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வந்தனர். மேலும், கோரிக்கை நிறைவேறும் வரை உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்தனர். நேற்று 4-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்சிவக்குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு அரசின் நிவாரண தொகை முதற் கட்டமாக தலா ரூ.4. லட்சத்து 12 ஆயிரத்து 500-க்கான காசோலை, அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கும் வரை பிழைப்பூதியமாக தலா மாதம் ரூ.5 ஆயிரம் மற்றும் 17 சதவீதம் இடர்பாடு நிவாரணத் தொகையுடன் வழங்குவது என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் வழங்குவது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிலம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தரப்பட்டது.

இதனையேற்று, உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் நேற்று மாலை பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கு முதற்கட்டநிவாரண உதவித் தொகையும்வழங்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு இன்று (ஏப்-11) நடைபெற உள்ளது. அதுவரை அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x