Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM

ஜப்பான் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு - விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாழ்த்து :

ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள தமிழக வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆணைய உறுப்பினர் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ள தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி (வாள்சண்டை), எ.சரத் கமல், ஜி.சத்தியன் (மேசைப்பந்து), சி.கணபதி (பாய்மரப் படகு ஓட்டுதல்) ஆகிய நான்கு விளையாட்டு வீரர்களும் தமிழக அரசால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். பாய்மரப் படகு பிரிவில் வருண் எ.தக்கர், நேத்ரா குமணன் ஆகியோர் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்திலும் பயனாளிகளாக உள்ளனர்.

இத்திட்டங்களில் உள்ள வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றல், விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு சீருடைகள் மற்றும் இதர வசதிகளுக்காக ஆண்டுக்கு முறையே ரூ.25 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் வீதம் அரசால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கம் வெல்ல தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x