Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

கேரளாவில் இருந்து ஆனைமலை பகுதிக்கு - கழிவுகளை ஏற்றிவந்த 3 லாரிகள் சிறைபிடிப்பு :

ஆனைமலை அருகே விவசாயிகளால் சிறைபிடிக்கப்பட்ட டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரம்.

பொள்ளாச்சி

கேரளாவிலிருந்து தமிழகத்தில் உள்ள விவசாய நிலத்தில் புதைப்பதற்காக கழிவுகளை ஏற்றிவந்த 3 டிப்பர் லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனர்.

ஆனைமலை அடுத்த செம்மனாம்பதி இரட்டைமடை தோட்டம் பகுதியில், கேரளாவைச் சேர்ந்த சஞ்சய் ஆண்டனி என்பவருக்குச் சொந்தமான பல ஏக்கர்நிலம் உள்ளது. இவரது தோட்டத்தில் இரவு நேரங்களில் கேரளா விலிருந்து கொண்டுவரப்படும் கழிவுகளை பெரிய அளவில் குழிதோண்டி புதைப்பதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனால் அப்பகுதிவிவசாயிகள் கடந்த சில நாட்களாக செம்மனாம்பதி பகுதியில் கண் காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கேரள பதிவெண் கொண்ட 3 டிப்பர் லாரிகள் நேற்று முன்தினம் இரவு சஞ்சய் ஆண்டனியின் தோட்டத்துக்கு குப்பை ஏற்றிக்கொண்டு வந்தன. நேற்று காலை அங்கு கழிவுகளை கொட்டியபோது, விவசாயிகள் சென்று 3 லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனர்.

கழிவுகளில் இருந்து கடுமையான துர்நாற்றம் பரவியதால் அருகில் உள்ள விவசாயத் தோட்டங்களில் இருந்த பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். தகவல் அறிந்து, போலீஸார் மற்றும் ஆனைமலை வருவாய் ஆய்வாளர் கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், திருச்சூர் மாநகராட்சி பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கழிவு என்பது தெரியவந்தது. விவசாயிகள் திரண்டதால் லாரியில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து விவசாயி பட்டீஸ் வரன் கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளாக கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகளை வாகனங்களில் ஏற்றிவந்து தமிழக எல்லையோர கிராமப் பகுதிகளில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதற்காகவே கேரளாவைச் சேர்ந்தவர்கள் தமிழக எல்லைப்பகுதியில் விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி உள்ளனர். பல்வேறு கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது.

மேலும், இங்குள்ள சிலர் பணம் பெற்றுக்கொண்டு இறைச்சிக் கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பதாகக் கூறி, மருத்துவக் கழிவுகளையும், கோழிக் கழிவுகளையும் வரவழைக் கின்றனர்.

இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மாசு அடைவதுடன் நீரின் சுவையும் மாறிவருகிறது. எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கழிவுகள் தமிழகத்துக்குள் வருவதை தடுக்க வேண்டும்” என்றார்.

கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள் அனைத்தும் தமிழக எல்லையில் உள்ள காவல் துறை சோதனைச்சாவடிகளை கடந்துதான் தமிழகத்துக்குள் கொண்டுவரப்படுகின்றன.

3 லாரிகளில் கழிவுகள் கடத்திக் கொண்டுவரப்பட்டது போலீஸாருக்கு எவ்வாறு தெரியாமல் போனது என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள் ளனர்.

மேலும், நேற்று கழிவுகள் கொண்டு வரப்பட்ட லாரியில், கேரளாவின் மங்கலம் அணையின் சிறப்பு நீர்பாசனத் திட்டப் பணிக்கு பயன்படுத்தப்படும் டிப்பர் லாரி என நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x