Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

சிதம்பரம் அருகே கிள்ளை பகுதியில் - தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் :

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பகுதியில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

இதுதொடர்பாக கிள்ளை, குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பது:

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த குச்சிபாளையம் மற்றும் கிள்ளை பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. கதிர் வரும் நேரத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளது. உடனடியாக அப்பகுதி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும். குச்சிபாளையம் தடுப்பணை மிகவும் பழுதடைந்து உள்ளது. இச்சூழலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் உவர் நீர் நிலங்களில் புகுந்து பாழ்படுத்துவதால் தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்வதாகவும், தடுப்பணையை சீர் செய்து தருவதாகவும் சார் ஆட்சியர் மதுபாலன் விவசாயிகளிடம் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் பொதுப்பணித் துறை அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x