Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயில் பங்குனி பெருந்திருவிழாவையொட்டி காந்தி மைதானத்தில் ராட்டினங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலின் முக்கிய விழாவான பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் விழா தொடக்க நாளிலேயே கோயிலின் பின்புறம் உள்ள காந்தி மைதானத்தில் ராட்டினங்கள், கடைகள் அமைக்கும் பணி தொடங்கி விடும்.
ஆனால், கடந்த ஆண்டு கரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்தாண்டும், கரோனா 2-வது அலை, சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றின் காரணமாக கோயில் விழா நடத்துவது தொடர்பாக தொடக்கத்தில் சில குழப்பங்கள் நிலவின. அவை தீர்ந்தாலும், கடைகள், ராட்டினங்கள் அமைப்பதில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இருந்தது.
தற்போது, காந்தி மைதானம், கோயிலின் எதிர்புறம் உள்ள மைதானம் ஆகியவற்றில் கடைகள் அமைப்பது மற்றும் சிறிய, பெரிய ராட்டினங்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், பங்குனி, சித்திரை ஆடி திருவிழாக்கள் ஆகியவை தான் எங்களுக்கு சீசன் காலம். ஆனால், தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு மாசி மகா சிவராத்திரி விழாவுடன் எங்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. அதன் பின்னர் ஊரடங்கு, கோயில் விழாக்கள் ரத்து ஆகியவற்றின் காரணமாக முற்றிலும் வேலை இழந்து தவித்தோம். இந்தாண்டும் மீண்டும் கரோனா பரவி வருகிறது என்கின்றனர். இதனால் இந்தாண்டும் வேலை இல்லாத நிலை ஏற்படுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால், சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT