Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM
கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தொகுதிக்குட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் வாக்காளர்களுக்கு பாஜகவினர் டோக்கன் விநியோகித்து, அதை ஒரு கடையில் அளித்தால் பணமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு விநியோகித்த சிலரை காங்கிரஸ் கட்சியினர் பிடித்து தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி வேட்பாளர்கள் மயூரா ஜெயக்குமார், அப்துல் வகாப் ஆகியோர் கெம்பட்டி காலனி அழகிரி திடல் பகுதியில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
வானதி சீனிவாசன் கண்டனம்
இந்த போராட்டம் குறித்து வானதி சீனிவாசன் நேற்று தனது ‘ட்விட்டர்’ பக்க பதிவில், “தாங்கள் தோற்றுவிடுவோம் என்று தெரிந்ததால் காங்கிரஸ், மய்யம் கட்சியினர் நாங்கள் டோக்கன் விநியோகிப்பதாக நாடகம் நடத்துகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை. அதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT