Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM
கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரேவை கரூர் தொகுதி திமுக வேட்பாளரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி நேற்று சந்தித்து புகார் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் செந்தில்பாலாஜி கூறியது: கரூர் வெங்கமேடு பகுதியில் திமுகவினர் தேர்தல் பணியாற்றுவதற்காக நேற்று முன்தினம் அமைத்த பந்தலை காவல் துறையினர் பிரித்து எறிந்துவிட்டனர். வாங்கல் வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் இடத்திலேயே அதிமுகவைச் சேர்ந்த கரூர் ஒன்றியக்குழுத் தலைவர் 2 மணி நேரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். டிஎஸ்பி, ஏடிஎஸ்பி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதுகுறித்து தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்தோம் என்றார்.
அதிமுக புகார்: முன்னதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் பிரசாந்த் மு. வடநேரேவை சந்தித்து அதிமுக வழக்கறிஞர் மாரப்பன் புகார் அளித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஆத்தூர் வள்ளிபாளையத்தில் அதிமுகவினர் மீது, திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சிவசாமி தாக்குதல் நடத்தியதில், 3 பேர் காயமடைந்தனர். எதிர்க்கட்சியினர் தோல்வி பயம் காரணமாக எப்படியும் தேர்தலை நிறுத்தி விடவேண்டும் என தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம். திமுகவினர் மீது சட்டப்படி நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT