Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

அசம்பாவிதங்கள் இல்லாமல் - நெல்லை மாவட்டத்தில் அமைதியான வாக்குப்பதிவு :

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற பல்வேறு வாக்குச் சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் அசம்பாவிதங்கள் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 1,924 வாக்குச் சாவடிகளில் 13,53,193 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருநெல்வேலி மாநகரில் ஒருசில வாக்குச்சாவடிகள் மாதிரி வாக்குச் சாவடிகளாக அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களை வரவேற்க ஊழியர், மருத்துவக் குழு, சாமியானா பந்தல், அலங்கார திரைச்சீலைகள், பலூன்கள் கட்டப்பட்டிருந்தன.

பாளையங்கோட்டை தூயயோவான் பள்ளியில் 112 ஏ வாக்குச்சாவடி பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தது. இங்கு பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்புக்கு நின்றபோலீஸார் என அனைவரும்பெண்களே நியமிக்கப்பட்டிருந்தனர்.

தேர்தல் பணியில் 9,236 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டத்தில் 309 பதற்றமான வாக்குச் சாவடிகள், 172 மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.திருநெல்வேலியில் மேலப்பாளையம், பாளையங்கோட்டை தெற்கு பஜார், டவுன், பேட்டை பகுதிகளில் பல வாக்குச் சாவடிகளில் காலையில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்தனர்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிடும் செங்குளம் கணேசன் செங்குளத்திலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அதை பத்திரிகை புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால், புகைப்படம் எடுக்க அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கணேசன் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துவிட்டு அங்கு தர்ணாவில் ஈடுபட்டார். இதைதொடர்ந்து புகைப்படம் எடுக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர் வெளியேறினார்.

திருநெல்வேலி மாநகரில் தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகர காவல்துறையினருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் மாநகர காவல் துணை ஆணையர்சீனிவாசன் மோர், குடிநீர், வாழைப்பழம் வழங்கி உற்சாகப்படுத்தினார். அத்துடன் வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கும் குடிநீர் வழங்கினார். மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.

வாக்குப்பதிவுக்குப்பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகளில் வைத்து சீலிடப்பட்டு வாக்குஎண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவோடு இரவாக கொண்டு சென்று வைக்கப்பட்டன.

வாக்குச் சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற பல்வேறு வாக்குச் சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட 600 மையங்களில் உள்ள 1,416 வாக்கு சாவடிகளில் அவர் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். மானூர் மற்றும் வள்ளியூர் பகுதிகளில் பதற்றமான வாக்குச் சாவடிகளை பார்வையிட்டார். மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றும்படி அறிவுரை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x