Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
சென்னையில் வெளியூர், வெளிமாநில நபர்கள் தேவையின்றி தங்கி உள்ளனரா என்று திருமண மண்டபங்கள், விடுதிகளில் போலீஸார் இரவு நேரத்தில் தீவிர சோதனை நடத்தினர்.
திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், அம்பத்தூர், மாதவரம், பூக்கடை, அடையாறு உட்பட சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையிலான தனிப்படை போலீஸார் சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், மேன்ஷன்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பிரச்சாரத்துக்காக வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வந்து, மீண்டும் சொந்த ஊர் திரும்பாமல் தொடர்ந்து தங்கி இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை போலீஸார் வெளியேற்றினர்.
மேன்ஷன்களில் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தப்பட்டது. சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதா என்று, அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தேவையின்றி வெளியாட்கள் சென்னையில் தங்கி இருந்தால், அவர்கள் தாங்களாகவே வெளியேற வேண்டும். மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT