Published : 05 Apr 2021 03:14 AM
Last Updated : 05 Apr 2021 03:14 AM

வேளாங்கண்ணி பேராலயத்தில் - ஈஸ்டர் பெருவிழா சிறப்பு பிரார்த்தனை : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று முன்தினம் இரவு ஈஸ்டர்பெருவிழா சிறப்பு பிரார்த்தனைநடந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த இயேசு கிறிஸ்து, மீண்டும் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பெருவிழா உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நேற்றுகொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய கலையரங்கத்தில், நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு ஈஸ்டர் திருநாள் பிரார்த்தனைகள் தொடங்கின.

தொடக்க நிகழ்வாக, பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடைபெற்றது. இதில், இயேசு உயிர்த்தெழுந்ததை உணர்த்தும் வகையில் பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது. கலையரங்க வளாகத்தின் மையப் பகுதியில் ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலயஅதிபர் பிரபாகர் அடிகளார், அரங்க மேடைக்கு எடுத்துச் சென்றார். பின்னர், பிரார்த்தனைகள் தொடங்கின.

இதைத் தொடர்ந்து, இரவு 11.40 மணியளவில் வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கத்தின் மேற்கூரையில், சிலுவைக் கொடியை கையில் தாங்கிய வண்ணம், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது. பின்னர், பேராலய அதிபர் பிரபாகர் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

இந்நிகழ்ச்சியில், பேராலய பங்குத் தந்தை அற்புதராஜ் அடிகளார், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம் அடிகளார், உதவி பங்குத் தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் கலந்துகொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கானோர், இந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x