Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM

ஜெயலலிதா ‘கெட்டப்’பில் வந்து : தாத்தாவுக்கு பிரச்சாரம் செய்த பேத்தி :

திருச்சி கிழக்குத் தொகுதியில் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் மாநகராட்சி 18-வது வார்டு பகுதிகளில் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவருடன், சேலை கட்டிய ஒரு சிறுமி, கண்ணாடி, சிறிய கொண்டை, நெற்றியில் நீண்ட பொட்டு என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கெட்டப்பில் மைக் பிடித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், “ஜெ.ஜெயலலிதா என்னும் நான்” என்று பேச்சைத் தொடங்கி, ‘‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்.. உங்களால் நான், உங்களுக்காகவே நான்’’ எனப்பேசியதுடன், தொடர்ந்து, ‘‘என் அன்பான தமிழக மக்களே, எனது ஆசி பெற்ற வெல்லமண்டி என்.நடராஜன் அவர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று இரட்டை விரலைக் காண்பித்தவாறு கூறிவிட்டு, “செய்வீர்களா?, இதை நீங்கள் செய்வீர்களா? என்று ஜெயலலிதா பாணியில் மக்களைப் பார்த்து கேள்வியும் எழுப்பினர். அப்போது அங்கு கூடியிருந்த அதிமுகவினர் ஜெயலலிதாவை வாழ்த்தி முழக்கமிட்டனர்.

அந்தச் சிறுமி வெல்லமண்டி என்.நடராஜனின் பேத்தி சாய் உத்ரா (10)என்பதும், 4-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. இந்த சிறுமி பேசிமுடிக்கும் வரை தலைவர்களுக்கு அருகில் நிற்பதுபோலவே கைக் கூப்பியவாறு பவ்யமாக நின்று கொண்டிருந்தார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x