Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

4 மண்டல காவல் இணை ஆணையர்கள் - பணப்பட்டுவாடாவை கண்காணிக்க உத்தரவு :

பரிசு பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடா தொடர்பாக சென்னையில் உள்ள 4 மண்டல காவல் இணை ஆணையர்களும் கண்காணிக்க வேண்டும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசு பொருட்களை கொடுத்து கவர்வதை தடுக்க தொகுதிகள்தோறும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினருடன் இணைந்து போலீஸாரும் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். உளவு பிரிவு போலீஸாரும் ரகசிய தகவல்களை திரட்டி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற உதவி செய்து வருகின்றனர்.

காவல் நிலையங்கள்தோறும் நுண்ணறிவு (உளவு) பிரிவு போலீஸார் உள்ளனர். இதேபோல் காவல் இணை ஆணையர்களும் தங்களுக்கு கீழ் தனியாக நுண்ணறிவு பிரிவு போலீஸாரை தனியாக வைத்து களத்தில் உள்ள ரகசிய தகவல்களை பெற்று தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மண்டல காவல் இணை ஆணையர்கள் பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இணை ஆணையர்களுக்கு கிடைக்கும் தகவல்களை தனக்கும் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என காவல் ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x