Published : 31 Mar 2021 03:17 AM
Last Updated : 31 Mar 2021 03:17 AM

தூத்துக்குடி மாவட்டத்துக்கு கூடுதலாக - 8 கம்பெனி துணை ராணுவப்படை வருகை : வாக்காளர்களுக்கு பணம் விநியோகத்தை தடுக்க தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்துக்கு தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 8 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். தேர்தல் கண்காணிப்புக் குழுவினருடன் இணைந்து வாகன சோதனை உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஈடுபடவுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக அஸாம் மாநிலத்தில் இருந்து 160 பேர் கொண்ட 2 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர் வந்துள்னர். இந்நிலையில் ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து 8 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர் (584 வீரர்கள்) தூத்துக்குடி மாவட்டத்துக்கு தற்போது வந்துள்ளனர்.

இவர்களுக்கு பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் வைத்து மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 8 கம்பெனி எல்லை பாதுகாப்புப் படையினர் கூடுதலாகவந்துள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் பணியில் உள்ள பறக்கும் படைமற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 தொகுதிகளுக்கும் தலா 9 பறக்கும் படைகள்,கோவில்பட்டி தொகுதிக்கு 15 பறக்கும் படைகள் என மொத்தம்60 பறக்கும்படை குழுவினர் பணியில் உள்ளனர். இதில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த தலா ஒருஉதவி ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்துதொகுதிகளிலும் 24 மணி நேரமும்தீவிரவாகன சோதனை மேற்கொள்ளப்படும்.

இதுபோல் 6 தொகுதிகளிலும் மொத்தம் 55 நிலையான கண்காணிப்பு குழுக்கள் பணியில் உள்ளன. பறக்கும் படைகளில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த தலாஒரு உதவி ஆய்வாளர் மற்றும்2 காவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து தொகுதிகளிலும் தீவிரவாகன சோதனை மேற்கொள்ளப்படும். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் போன்றவற்றை தடுக்கும் பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள்.

மேலும், மாவட்டத்தில் எல்லைபகுதியில் உள்ள 19 சோதனைச் சாவடிகளிலும் உள்ளூர் போலீஸாருடன் துணை ராணுவப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்குப்பதிவு தினத்தன்றுவாக்குச்சாவடிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது, முகக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்துவது மற்றும் பாதுகாப்பு பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள் என்றார். நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை தளவாய் ராஜேஷ் மேகி, கூடுதல் தளவாய் சந்துகுமார் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x