Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM
வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர்அசன் மவுலானா மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ஆர்.தாமோதரன் சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
சென்னை வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா போட்டியிடுகிறார். கடந்த 21-ம் தேதி காலை 10 மணிக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அதிமுக வேட்பாளர் அசோக் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார். இதில் அசன் மவுலானா, அவரது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டன.
வேளச்சேரியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்யக் கூடாது என்றுகொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டும், அசோக்உள்ளிட்டோர் கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அசன் மவுலானாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் இருந்துபெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில், காங்கிரஸ் கட்சிசார்பில் சில பொது கோரிக்கைகளையும் வலியுறுத்துகிறோம். காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் போலீஸாரை இடமாற்றம் செய்ய டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் போட்டி யிடும் 25 தொகுதிகளிலும் கூடுதல் துணை ராணுவப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT