Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM

சிவகங்கை அருகே பணப் பட்டுவாடா புகார் - அதிமுக நிர்வாகி வீட்டில் வருமான வரி சோதனை :

சிவகங்கை அருகே பணப் பட்டுவாடா புகாரைத் தொடர்ந்து அதிமுக பெண் நிர்வாகி வீட்டில் வருமான வரி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே ஆளவந்தான்பட்டியில் வசிப்பவர் ஆனந்தவல்லி. இவர் கூத்தலூர் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்க இயக்குந ராகவும், அதிமுக மகளிர் அணி நிர்வாகியாகவும் உள்ளார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா நடைபெறுவதாகத் தேர்தல் அதிகாரிகளுக்குப் புகார் சென்றது. இதையடுத்து மதுரை வருமான வரி அதிகாரி பெருமாள், தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர்கள் காளிமுத்து, உமாமகேஸ்வரி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் ஆனந்தவல்லி வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.70 ஆயிரம் இருந்தது.

இது குறித்து ஆனந்தவல்லி அதிகாரிகளிடம் கூறும்போது, வீடு பராமரிப்புக்காக வங்கியில் கடன் வாங்கி வைத்திருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அதற்கான ஆதாரத்தை அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை. இதையடுத்து அப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அருகே உள்ள அதிமுக நிர்வாகி சந்திரன் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்தது. அங்கு பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.

நேற்று பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கிய இச்சோதனை மாலை 5 மணி வரை நடந்தது.

இத்தகவல் அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி சாத்தையா தலைமையில் அக்கட்சியினர் அங்கு கூடினர். தேர்தல் அதிகாரி கள் முறையாக சோதனை செய்யவில்லை என அவர்கள் கோஷமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x