Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம்.
கடலூர் தொகுதி எம்எல்ஏவும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத்துடன் இவருக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்தது. அமைச்சரின் எதிரணியான கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரான அருண்மொழித் தேவனுடன் இணைந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கேட்டு தலைமையிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், குறிஞ்சிப்பாடி முன்னாள் எம்எல்ஏ-வான சொரத்தூர் ராஜேந்திரனுக்கு பண்ருட்டி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் அமைச்சர் சம்பத்தின் பங்கு இருப்பதாக கருதிய சத்யா பன்னீர்செல்வம், கட்சித் தலைமையிடம் தனக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் பழனிச்சாமியை மாற்றிவிட்டு, முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயத்துக்கு வாய்ப்பு தரப்பட்டது.
இதனால் விரக்தியடைந்த சத்யா பன்னீர்செல்வம் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு பொது வாழ்விலிருந்து விடைபெறுவதாகவும், இத்தனை நாள் ஒத்துழைப்பு நல்கிய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் சி.வி.சண்முகம், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழித்தேவன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் முடிவை வாபஸ் பெறக் கோரி வீடு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT