Published : 16 Mar 2021 03:13 AM
Last Updated : 16 Mar 2021 03:13 AM
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் நேரடி அரசியலுக்கு வந்துள்ளார். அவரது பெயரில் உள்ள அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள 2 கட்சிகள் 16 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இதுகுறித்து சகாயம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலுக்கு குறைவான காலமே இருப்பதால், புதிய அரசியல் கட்சியைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் களப்பணியாற்றிய இடங்கள், அவர்கள் நன்கு அறிமுகமான தொகுதிகளில் போட்டியிடுகிறோம். கூட்டணியில் உள்ள தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளிலும், வளமான தமிழகம் கட்சி ஒரு தொகுதியிலும், சகாயம் அரசியல் பேரவை 20 தொகுதிகளிலும் ஆக மொத்தம் 36 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.
இத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எதிர்காலத்தில் நாங்கள் புதிய கட்சி தொடங்கி, சின்னம் பெற்று 234 தொகுதிகளிலும் போட்டியிடும்போதுதான் நான் போட்டியிடுவேன். எங்களுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் எங்களது கொள்கைகள், கோட்பாடுகள் கொண்ட சிறிய தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் நான் பிரச்சாரம் செய்வேன். வேலைவாய்ப்பை வழங்கிவிட்டாலே மக்களுக்கு இலவசம் தேவையில்லை. இவ்வாறு சகாயம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT