Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் நேற்று கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார். இதை ட்விட்டரில் பதிவிட்டு தடுப்பூசிக்குத் தகுதியானவர்களை ஊக்கப்படுத்துங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. மார்ச் 1முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டது. அன்றைய தினம் பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸில் கோவாக்ஸின் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள், முக்கியபிரபலங்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். மக்களும் ஆர்வமாகதடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். ஆனாலும் பலரிடத்தில் தயக்கமும் அச்சமும் இருந்து வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே தடுப்பூசி எடுத்துக் கொள்ள தகுதியானவர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது தாயார் நேற்று தடுப்பூசி எடுத்துக் கொண்டதை பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டார்.
மோடி வெளியிட்ட பதிவில், ‘எனது தாயார், தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார் என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள உதவவும், தயங்குபவர்களைத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்கு விக்குமாறும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனம், இங்கிலாந்தின் ஆக் ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா இணைந்து தயாரித்த ‘கோவிஷீல்ட்’, மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து தயாரித்த ‘கோவாக்சின்’ தடுப்பூசிகள் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 2.52 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT